Sunday, July 3, 2011

எந்திரன் காப்பியடிக்கப்பட்ட கதையா? சில விளக்கங்கள்!

முதலிலேயே சொல்லி விடுகிறேன் இது எனது பதிவு அல்ல. நெட்டில் உலாவிய போது இதை படிக்க நேர்ந்தது. இவர்  ஏன் தமிழ்மணத்தில் இவரை இணைக்கவில்லை என்று தெரியவில்லை. நீங்கள் இதை படித்தீர்கள இல்லையா என்று தெரியாது. படிக்காதவர்கள் படிக்கவே இதை நான் என் ப்ளாக்கில் இணைக்கிறேன். மற்றப்படி காபி அண்ட் பேஸ்ட் எனக்கு பிடிக்காத ஒன்று. இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ' நான் இளையராஜா ரசிகன்'


இந்த இடுகைக்கு சொந்தக்காரரின் பெயர் balhanuman
இந்த ஒரிஜினல் இடுகைக்கான சுட்டி உங்கள் பாராட்டு எல்லாம் இவரையே சேரும்.

எந்திரன் காப்பியடிக்கப்பட்ட கதையா? சில விளக்கங்கள்!


எந்திரன் காப்பியடிக்கப்பட்ட கதையா? சில விளக்கங்கள்!

சுஜாதா உயிருடன் இருந்திருந்தால்… எந்திரன் கதைக்கு உரிமை கோருபவர்கள் நிலை என்ன?

ரு படைப்பு அல்லது படம் பிரபலமாகிவிட்டால், அதன் காப்புரிமைக்கு சொந்தம் கொண்டாடி பலரும் வழக்குத் தொடர்வது இன்று நேற்றல்ல… பல்லாண்டு பாரம்பரியம். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை அந்தப் பாரம்பர்யம் தொடர்கிறது.
குறிப்பாக, ஒரு படைப்பின் மூல முடிச்சுக்கு பலர் சொந்தம் கொண்டாடுகின்றனர். அப்படியெனில், ஒருவர் மற்றவரை காப்பியடித்தார் என்று சொல்வதா… அல்லது ஒருவருக்குத் தோன்றிய கற்பனை முடிச்சு இன்னும் சிலருக்கும் ஏன் தோன்றியிருக்கக் கூடாது என்று திருப்பிக் கேட்பதா…
எந்திரன் கதையைப் பொறுத்தவரை, ரோபோ என்பது அடிப்படை ஆதாரம். இந்த ரோபோவுக்கு மனிதத் தன்மை வந்துவிட்டால், ரோபோக்கள் சுயமாக சிந்திக்க, ஆட்சி நடத்த, அரசியல் பண்ண, ஒருவர் மீது காதல் கொள்ள, பெண்ணை அனுபவிக்க ஆசைப்பட்டால்… என்னவெல்லாம் நடக்கும் என்று தமிழில் புனைவுகளாகக் கொண்டு வந்தவர் அமரர் சுஜாதா.
ரோபோ என்றில்லை… தமிழில் விஞ்ஞானக் கதை என்று எடுத்துக் கொண்டால் அந்தப் பெருமை சுஜாதாவையே சேரும். அவருக்கு முன் சிலர் எழுதியிருந்தாலும் அவை ஒரு ஊர்ல ஒரு ராஜா டைப் கதைகளாகவே அமைந்தன. தமிழில் விஞ்ஞானக் கதை என்ற கருத்தையே கிண்டல் செய்தார்கள் எழுபதுகளில் (தமிழ் சினிமாவில் முதல் விஞ்ஞானப் படம் எம்ஜிஆரின் ‘கலையரசி’. அதுவும் கூட ஒரு ஆங்கிலப் படத்தின் பாதிப்பாக வந்த அமெச்சூர் முயற்சிதான். ஆனாலும்அதுவே அன்றைக்கு பெரிய சாதனைதான்!).
ஆனால் சுஜாதாதான் தமிழில் விஞ்ஞானக் கதைகள் சாத்தியம் என்பதை நிரூபித்தவர். அதுமட்டுமல்ல, இந்தக் கதைகளை வறண்ட விஞ்ஞான விவரணங்களாகத் தராமல் படிக்க புதிய, இனிய அனுபவத்தைத் தரும் கதைகளாகத் தந்தவர்.
ரோபோக்களின் ஆதிக்கம், விண்வெளியில் காதல், அடுத்த நூற்றாண்டில் மனிதனின் நிலை, நிலவில் மனிதன் வசிக்க நேர்ந்தால்… இப்படியெல்லாம் புதுப்புது முடிச்சுக்களை உருவாக்கி அதில் விறுவிறுப்பான கதையைப் புனைந்தவர் சுஜாதா. ஆனால் அவை அனைத்திலும் விஞ்ஞான உண்மைகளும் சாத்தியங்களும் பொதிந்திருந்தன.
அவரைப் பார்த்துதான் பலரும் விஞ்ஞானக் கதைகளைப் புனைய ஆரம்பித்தனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. “இல்லையில்லை… நான் இந்த ஆங்கிலப் புத்தகம் படித்தேன்… படம் பார்த்தேன்.. அதை வைத்து எழுதினேன்…” என்று யாரும் சொல்ல முயன்றால், அது உடான்ஸ். காரணம், மற்றவர்களின் விஞ்ஞானக் கதைகளுக்கான மொழி நடை கூட சுஜாதாவிடமிருந்து இரவல் பெற்றதாகவே இருப்பதைக் காணலாம். அவ்வளவு ஏன்… பல முன்னணி தமிழ் பத்திரிகையாளர்கள் செய்திகள், கட்டுரைகளைக் கூட சுஜாதா பாணியில் தந்ததெல்லாம் நடந்திருக்கிறது.
அந்த சுஜாதா உருவாக்கிய கதைதான் ‘என் இனிய இயந்திரா’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘மீண்டும் ஜீனோ‘.
இந்தக் கதைகளின் ஆதாரம் ரோபோக்களின் ஆதிக்கம் மற்றும் மனிதனை மிஞ்சிய, படைத்தவனின் தலையிலேயே கைவைக்கப் பார்க்கும் ரோபோவின் அத்துமீறல்கள்தான்.
இந்தக் கதை எழுதப்பட்டது இன்று நேற்றல்ல… 25 ஆண்டுகளுக்கு முன்னால். நிலா – சிபி – ஜீனோ பாத்திரங்களைப் படித்தவர்கள், ஜீவா என்ற கேரக்டரைப் படித்தவர்கள் நிச்சயம் எந்திரன் ஒரு காப்பியடிக்கப்பட்ட கதை என்று கூறத் துணிய மாட்டார்கள். ஏன்… சுஜாதா என்ற மேதை இன்று இருந்திருந்தால், இத்தனைப் பேர் கிளம்பியிருப்பார்களா என்றே தெரியாது!
ரஜினி நடித்த எந்திரனில் ஆரம்ப சிட்டியின் புத்திசாலித்தனமான குழந்தைத்தனங்கள் அனைத்துமே சுஜாதாவின் ஜீனோ சாயலில் இருப்பதை எளிதில் உணரலாம்.
எந்திரன் என்ற தலைப்பே சுஜாதாவுடையது. அவருடைய இயந்திரா என்பதுதான் எந்திரனாக மருவியது. இதையெல்லாம் படத்தின் ஆரம்ப டைட்டிலில் அமரர் சுஜாதாவுக்கு ஒரு கவுரவ நன்றி கார்டு போட்டுக் காட்டுவதன் மூலம் ஷங்கரால் செய்திருக்க முடியும். இந்த புதிய காப்புரிமையாளர்கள் கிளம்பியே இருக்கமாட்டார்கள்.. அதை ஏன் அவர் செய்யத் தவறினார் என்பது புரியவில்லை!
என் இனிய இயந்திரா ஒரு விஸ்தாரமான விஞ்ஞானக் கதை. 1984-ல் 2021-ஐக் கற்பனை செய்து சுஜாதா படைத்திருப்பார். ஆனால் எந்திரன் முழுக்க இந்தக் கதையல்ல. இதன் பாதிப்பில், சில காரெக்டர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எளிய அறி்முகம், பிரமாண்ட க்ளைமாக்ஸுடன் எந்திரனைத் தந்திருக்கிறார் ஷங்கர்.
இப்படிப்பட்ட கற்பனைகளுக்கு, ‘தானே அத்தாரிட்டி’ என்றும் சுஜாதா சொல்லிக் கொண்டதில்லை. யாரும் கற்பனை செய்யலாம். ஆனால் ஆதாரம் ஒன்றுதான் என்பது அவர் கருத்து.
என் இனிய இயந்திரா கதையின் முன்னுரையில் சுஜாதா இப்படிச் சொல்கிறார்:
“விஞ்ஞானக் கதை என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக இருக்க வேண்டும் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
தப்பு.
விஞ்ஞானக் கதைப்படி (சயின்ஸ் ஃபிக்ஷன்) என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது.
அதன் காலைகளில் இருளையும் ராத்திரிகளில் வெளிச்சங்களையும் தேவைப்பட்டால் அமைத்துக் கொள்ளலாம். அதன் கடவுள்கள் புரோட்டான் வடிவெடுக்கலாம். அதன் பெண்கள் மகப்பேற்றை ஒட்டுமொத்தமாக இழந்து மீசை வைத்துக் கொள்ளலாம்.. அதன் நாய்கள் பிளேட்டோவைப் பற்றியும் பிரும்மசூத்திரம் பற்றியும் பேசலாம்…
ஆயிரமாயிரம் மாற்று சாத்தியக் கூறுகளை ஆராயும் அற்புத சுதந்திரத்தைப் பேசுகிறது வி.க.!
அதைப் பயன்படுத்தும்போது, அதன் புதிய விளையாட்டுக்களை ஆடும்போது ஒரேயொரு எச்சரிக்கைதான் தேவைப்படுகிறது. கதையில் இன்றைய மனிதனின் உணர்ச்சிகளுடன் ஆசாபாசங்களுடனும் ஏதாவது வகையில் ஒரு சம்பந்தம் அல்லது தொடர்பு காட்ட வேண்டும்…!”
இந்த அடிப்படையில்தான் முன்பே ‘சொர்க்கத் தீவையும்’ படைத்தார் சுஜாதா.
அந்தக் கதை வெளிவந்த காலத்தில், சுஜாதா ஏராளமான ஆங்கிலக் கதைகளைக் காப்பியடித்ததாக புகார் கூறினார்கள். அதற்கு சுஜாதா எழுதிய விளக்கம், இன்று காப்பிரைட் கேட்கும் அத்தனைப் பேருக்கும் பொதுவாகப் பொருந்தும்:

“சொர்க்கத் தீவு’ கதை தொடர்கதையாக வந்தபோது ‘ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984′ போல இருக்கிறது என்று ஒருவர் எழுதியிருந்தார். மற்றொருவர் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்’ என்றார். பிறிதொரு பெண்மணி ஐரா லெவினின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே’ என்றார். இவர்கள் எல்லாரும் சொல்கிறபடி நான் காப்பியடிக்க வேண்டுமென்றால் ஒரு லைப்ரரியையே அடித்திருக்க வேண்டும். பின் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளில் அர்த்தமில்லையா ?
பார்க்கலாம்.
நான் மேற்சொன்ன நாவல்களை எல்லாம் படிக்கவே இல்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம். மேற்சொன்ன புத்தகங்கள் என்ன, நிறைய சயின்ஸ்
ஃபிக் ஷன் புத்தகங்கள் படித்திருக்கிறேன். என் நண்பர்களுக்கு நான் சில ஆசிரியர்களைச் சிபாரிசு செய்கிறேன்.
Arthur Clarke, Ray Bradbury, Henry Slesar, Theodore Sturgeon, Anthony Burgess.
பெரும்பாலும் எல்லா சயின்ஸ் ஃபிக் ஷன் நாவல்களிலும் சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன.
அவை:
எதிர்காலத்தைப் பற்றி அவை சொல்லும்.
இன்றைய சமுதாய அமைப்புக்குப் பதிலாக, மாறுதலாக ஒரு புதிய அமைப்பை- ஒருவித Utopia (கற்பனை உலகம்) அவைகளில் சொல்வார்கள்.
அந்தப் புதிய அமைப்புக்கு எதிராக ஒருவன் முயற்சி செய்வான்.
‘1984′ என்கிற நாவல் மிக அதீதமான யுத்த பயத்தின் அடிப்படையில் பீடிக்கப்பட்ட ஜனங்கள் விழித்துக் கொண்டே வாழும் கெட்ட சொப்பனம் போன்ற வாழ்க்கையைப் பற்றியது. இதில் சரித்திரம் தினம் தினம் மாற்றி எழுதப்படுகிறது. உண்மை என்பது மணிக்கு மணி மாறுகிறது. இந்த அமைப்பை எதிர்த்த ஒருவனின் தோல்வியைப் பற்றியது இந்த நாவல்.
ஹக்ஸிலியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்’ விஞ்ஞான முறைப்படி டெஸ்ட் டியூப்களில் சுத்தமாக நிர்ணயிக்கப்படும் புதிய வர்ணாச்ரம தர்மத்தைப் பற்றியது. இதையும் ஒருத்தன் எதிர்க்கிறான்.
ஐரா லெவின்னின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே’ என்பதில் அகிலம் முழுவதையும் ஒரு ராட்சஸக் கம்ப்யூட்டர் ஆள்கிறது. ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும் மக்கள் அகதிகளாகத் தப்பித்துக் கொண்டு பழைய வாழ்க்கை, அதன் சுக துக்கங்கள் சகிதம் கூட்டமாக, அழுக்காக, சந்தோஷமாக வாழ்கிறார்கள். கதாநாயகன் ஆள் திரட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் ஆட்சியை எதிர்க்கச் செல்கிறான். அவனுக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அவன் வாழ்ந்த அந்த சுதந்திரப் பிரதேசம்கூடக் கம்ப்யூட்டரின் ப்ரோக்ராம்களின் சாகசங்களில் ஒன்று. அவன் தப்பித்துத் திரும்ப வருவது எல்லாமே முன்பே நிர்ணயிக்கப்பட்ட விஷயம்.
இப்போது சொல்லுங்கள். Am I cleared ?”
-சுஜாதா தன் கதைகளுக்கு முன்பு கூறிய இதே விளக்கங்களையும், கடைசியில் கேட்ட கேள்வியையும் ஷங்கர் திருப்பியடிக்கலாம், காப்புரிமை கோரும் கதாசிரியர்களிடம்!!
-வினோ
IniyaTamil TopSites
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Mohamed Faaique said...

நல்ல விளக்கம் நன்பரே!!